பாலாற்றில் கரை ஒதுங்கிய ஹயக்ரீவர் ஐம்பொன் உலோகசிலை..!
காஞ்சீபுரம், நவ.26-
காஞ்சீபுரம் அருகே வளத்தோட்டம் கிராம பாலாற்று கரையோரம் வெள்ளப்பெருக்கு காரணமாக கரை ஒதுங்கிய இரண்டரை அடி உயரம் உள்ள ஹயக்ரீவர் ஐம்பொன் உலோக சிலையை காஞ்சீபுரம் வட்டாட்சியர் காமாட்சி தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து பாலாறு மற்றும் செய்யாறு அருகே வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் காஞ்சீபுரம் அருகே வளத்தோட்டம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கமுக்கபள்ளம் கிராம பகுதி பாலாற்று கரையை ஒட்டி உள்ளது. கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஆற்று கரையோரம் சென்றபோது கரையோரம் சாமி சிலை ஒன்று கிடப்பதை கண்டு அதை சுத்தம் செய்து வெளியே எடுத்தார்.
சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டபின் அது ஹயக்ரீவர் என அழைக்கப்படும் கல்வி கடவுளின் சிலை என அறிந்து கிராம நிர்வாக அலுவலர் அப்தல்பஷீத்திடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி உடன் காஞ்சீபுரம் வட்டாட்சியர் காமாட்சி சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
அச்சிலை விஜய நகர பேரரசு காலத்து சிலை என்றும், சுமார் ஒன்றரை அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டு ஐம்பொன் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது.
இதைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இச்சிலையினை அரசு விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கருவூலத்தில் வட்டாட்சியர் லட்சுமி ஒப்படைத்தார்.
பாலாற்று வெள்ளத்தில் சிக்கி கரை ஒதுங்கிய ஹயக்ரீவர் ஐம்பொன் உலோக சிலையானது பார்க்க அழகான வடிவமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments