Breaking News

இறந்தவர்கள் பெயரிலும் ஓய்வூதியம்... பயிர்க்கடன் தள்ளுபடியில் குளறுபடி... நிதி அமைச்சர் பிடிஆர் அதிர்ச்சி தகவல்

சென்னை, நவ.2-

அரசு திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வெளிப்படை தன்மையுடன் செயல்படும் தமிழக அரசு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட வரவு-செலவு திட்டத்தின் அடிப்படையில் அரசு முக்கியமாக பல பயன்களை அடைந்துள்ளது. முடங்கி உள்ள பணத்தை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி செலவு செய்யப்படாத சுமார் 2 ஆயிரம் கோடி நிதிகளை திரும்ப பெற்று வருகிறோம். கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் உள்ள குளறுபடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறாக கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பண பயன் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரே நபர் பலமுறை பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு சிறிய நிலத்துக்காக கடன் பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. சில இடங்களில் நகை மதிப்பீடு முறையாக நடத்தாமலும் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும். 

மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் சென்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதே போல் மறைந்தவர்கள் பெயரிலும் ரே‌ஷனில் இலவச அரிசி பெறுவதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. தவறாக நிதி சென்றடைய கூடாது என்பதை அறிந்து அந்த பணம் மிச்சப் படுத்தப்பட்டு உள்ளது. முதியோர் பென்சன் வாங்குபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்க முதலமைச்சர் கட்டளையிட்டதின் அடிப்படையில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பென்சன் வழங்க உள்ளோம். அரசு திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments