சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் கவிதா உயிரிழப்பு - முதலமைச்சர் அஞ்சலி
சென்னை
சென்னையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் ஊடக வாகன பார்க்கிங் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான மரம் இன்று காலை கீழே விழுந்தது. விபத்தில் பெண் தலைமைக் காவலர் கவிதா உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர்.
தலைமைச் செயலகத்தில் பெரிய மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு பெய்த மழை காலை வரை நீடித்தது. இன்று காலையில் சென்னை தலைமைச்செயலகம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நேரத்தில் காலை 9.10 மணியளவில் கவிதா என்ற பெண் போலீஸ் தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்றார்.
அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பினார்.
அப்போது மழையுடன் வீசிய பலத்த காற்றில் தனிப்பிரிவு அலுவலகம் அருகே நின்ற பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் கவிதா மீது விழுந்தது. இதில் அவர் மரத்துக்கு அடியில் சிக்கினார். கவிதாவின் தலை மரத்தின் அடியில் சிக்கியதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
தலையில் சிறிய ஹெல்மெட் மற்றும் மழை கோட் அணிந்து கொண்டு கவிதா பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக கழன்று விழுந்து கிடந்தது.
உடனடியாக பெண் போலீஸ் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னரே அவரது உடலை மீட்டனர்.
மரம் சாய்ந்து விழுந்தபோது தலைமைச்செயலக வளாகத்துக்குள் ஒரு சில காவலர்களும் பணியில் இருந்தனர். மரம் விழுந்த இடத்தில் போக்குவரத்து காவலர் முருகன் என்பவரும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவரும் மரம் விழுந்ததில் சிக்கிக்கொண்டார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
மரத்தை அகற்றும் பணியின் போது பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், ராஜா, கோபு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மரம் சாய்ந்து உயிரிழந்த பெண் போலீஸ் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கணவர் பெயர் சாய்பாபா. ரெயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயதாகும் இவர் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மகள் பெயர் சினேகபிரியா 20 வயதான இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த அவருக்கு இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் காவல் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்காகவே காலையில் வீட்டுபணிகளை எல்லாம் முடித்துவிட்டு தலைமைச் செயலகத்துக்கு வேலைக்கு வந்தார். அப்போதுதான் பழமையான மரம் பெண் போலீஸ் கவிதாவின் உயிரை பறித்துவிட்டது.
பெண் போலீஸ் பலியானது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று (02.11.2021) காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.
அப்போது அங்கே காவல் பணியில் இருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பலியான கவிதா இன்று காலை வீட்டில் இருந்தவர்களிடம் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக சந்தோஷத்துடன் கூறிவிட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெண் போலீஸ் உயிரிழந்தது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் ஆய்வு
தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் பெண் காவலர் பலியான இடத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மரம் விழுந்தது தொடர்பாக அங்கிருந்த காவலர்களிடமும், அதிகாரிகளிடமும் அவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இருவரும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
15 மரங்களை அகற்ற முடிவு
பெண் போலீஸ் கவிதா உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக தலைமை செயலகத்தில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கும் மரங்களை கணக்கெடுத்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி ஊழியர்களும், வனத்துறை ஊழியர்களும் அங்கு ஆய்வு செய்து 15 மரங்களை அகற்ற முடிவு செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments