புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 30ம் தேதி உருவாகிறது... கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, நவ.29-
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாக இருந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக நாளை(30ம்தேதி) உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் போது வலுவடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:&
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 30ம் தேதி உருவாகிறது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுவடையும் சமயத்தில் தமிழகத்தில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று (29ம்தேதி), கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை 30ம்தேதி, கன்னியாகுமரி, திருநெல் வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 1ம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Click here வானிலை தகவல் இணையதளம்
Click here கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு
No comments
Thank you for your comments