கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது - மூதாட்டி ஒருவர் பலி
ஈரோடு :
கனமழையின் காரணமாக ஈரோட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்...
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. அதேபோல சனிக்கிழமை (02.10.2021) மாலை முதல் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மரப்பாலம் பகுதியின் நேதாஜி வீதியில் ராஜம்மாள் மற்றும் அவரது மகன் ராமசாமி ஆகியோர் வசித்து வந்தனர்.
நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக அவர்கள் வசித்து வந்த ஓட்டு வீடானது மழையின் ஈரம் பரவி காணப்பட்டதால் இன்று அதிகாலையில் வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதில் தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாள் மற்றும் அவரது மகன் ராமசாமி ஆகிய இருவரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர். இதில் ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜம்மாளின் மகன் ராமசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பரிதாபமாக உயிரிழந்த ராஜம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
No comments
Thank you for your comments