Breaking News

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை:



சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக, நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.  இரண்டாம் அலகின் திட்டப்பணிககளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19-10-2021) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில்  கிழக்குக் கடற்கரை சாலை, நெம்மேலியில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு  100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.10.2021)  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னைக்கு அருகே வற்றாத நீராதாரங்கள் இல்லாத காரணத்தினால் சென்னைப் பெருநகரம் வடகிழக்குப் பருவ மழையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழை பொய்க்கும் காலங்களில் நகரின் நீண்ட காலக் குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைத்துள்ளது. கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன.

தமிழ்நாட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் முதல் நிலையம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2010ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

இரண்டாவது நிலையமாக நெம்மேலியில் 805 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அன்றைய  துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 23.2.2010 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று,  நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட இக்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்குக் குழாய் கட்டமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10 இலட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

அதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் 1259 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும், கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Intake Sump), சுத்திகரிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி (Product Water Tank), சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம் (Product Water Pumping Station), வடிகட்டப்பட்ட கடல் நீர்தேக்கத் தொட்டி (Clarified Water Tank) மற்றும் உந்து நிலையம், காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி (Dissolved Air Flotation), நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறைச் சவ்வூடுப் பரவல் நிலையம் (Ultra Filter & Reverse Osmosis Process), நிர்வாகக் கட்டடம், கசடுகளைக் கெட்டிப்படுத்தும் பிரிவு (Sludge Thickener), செதிலடுக்கு வடிகட்டி (Lamella Clarifier) போன்ற கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும், இத்திட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.   முதலமைச்சர் ஸ்டாலின் முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் வாயிலாகப் பெறப்படும் குடிநீர் மூலம், தென்சென்னைப் பகுதிகளான உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவர்.

இந்நிகழ்வில், நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர்  சி. விஜயராஜ் குமார்,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஆர். ராகுல்நாத்,  சென்னைக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர்  பி. ஆகாஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments