Breaking News

நெல் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுப்பு

 ஈரோடு, அக்.21-

ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம் செயல் படுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமமந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப் பட்டுவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பாபருவத்தில் அக்ரி கல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் நடப்பு சம்பா பருவத்தில் நெல்-2 பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். நெல்-2 பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.528.00 செலுத்தவேண்டும்.

காப்பீடுசெய்யும் முறை

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்தகடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறா விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்ய கடைசி நாள்

வருகின்ற நவம்பர் 15,2021 ஆம் தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு மாவட்டஆட்சித் தலைவர்ஹெச்.கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார். 


No comments

Thank you for your comments