Breaking News

வாலாஜாபாத் அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திலுள்ளது பழைய சீவரம் கிராமம். இக்கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னர் காலத்தை சார்ந்த குறுநில மன்னர் ஒருவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர் போரில் அம்மன்னரின் உயிரைக் காக்க சண்டையிட்டு வீரமரணம் அடைந்தததால் அவ்விரண்டு வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல் ஒன்று துண்டு கல்வெட்டுக்களுடன்  உடைந்த நிலையில்  புதர்களுக்கு இடையில் உத்தரமேரூர் ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் அவர்கள் கண்டறிந்துள்ளார்.



இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர்  கொற்றவை ஆதன் கூறியதாவது..

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு  செல்லும் சாலையில் பாலாறு, செய்யாறு, வேகவதிஆறு என்று மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் அருகில் பாலாற்றங்கரையில் உள்ள கிராமம் பழையசீவரம் கிராமமாகும்.

இக்கிராமத்தில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது இவ்வாலயத்தில் 11ஆம் நூற்றாண்டை சார்ந்த முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு உள்ளது அப்போது இவ்வூருக்கு சீயபுரம் என்று பெயர் இருந்ததாக கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. மேலும்13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டும் இங்கு காணப்படுகிறது.

மேலும் ஆண்டிற்கு ஒருமுறை காணும்பொங்கல் அன்று காஞ்சி வரதராஜ பெருமாள் பார் வேட்டைக்கு இங்கு வந்து ஒரு நாள் முழுவதும் இருந்து செல்லும் மரபு பல நூற்றாண்டுகளாக தற்போதும் கடைபிடிக்கப்பட்டது வருகிறது.

அகிலன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில்   இந்த நடுகல் சிற்பத்தை கண்டறிந்தோம்.

நடுகல் எடுக்கும் பழக்கம் என்பது தமிழர் வாழ்வில் பன்னெடுங்காலமாக ஒரு பண்பாட்டின் ஓர் அங்கமாகவும் அடையாளமாகவுமே இருந்துள்ளது. 

இது குறித்த தகவல்கள்2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் நமக்கு கிடைக்கின்றன.

ஆநிறைக்கூட்டங்கள் எனப்படும் கால்நடை கூட்டங்களை கவரும் பொழுதோ தன் இனத்தை காக்கவோ,  ஊரைக் காக்கவோ, நாட்டைக் காக்கவோ, மண்னை காக்கவோ, மன்னனை காக்கவோ நடைபெறும் போர்களில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தால் இறந்த அவ் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின்  உருவத்தை ஒரு கல்லில் பொறித்து நட்டு வைத்து அதை போற்றி வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு நடுகல் வழிபாடு என்று பெயர். 

நாங்கள் கண்டெடுத்த இந்த நடுகல் ஆனது புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு  செல்லும் வழியில்  புதர்களுக்கு இடையே உள்ளது.

2 அடி அகலம் 6 அடி நீளம் கொண்ட இந்த பலகைக்கல்லில் 6 வரிகள் கொண்ட துண்டு கல்வெட்டும் அதன் கீழ் இரண்டு வீரர்களின் உருவமும் இடம்பெற்றுள்ளது. இந்த நடுகல்லின் ஆரம்பம் சற்று சிதைந்தும் வலப்பகுதி முழுமையாக உடைந்துள்ளதால் முழுமையான கல்வெட்டுக்கள் இல்லை. முழு பகுதி கிடைக்காமல் துண்டாக கிடைத்துள்ளது.

முதல் வீரனினது வலக்கையில் வளைந்த நிலையில் குறுவால் போன்ற ஆயுதமும் இடது கையைமடித்து நீண்ட ஈட்டியை பிடித்த நிலையிலும் வலது பக்கம் நோக்கி கால்கள் செல்லும் நிலையில் உள்ளது. இவரது தலையில் கொண்டையும் கைமணிக்கட்டில் வளையங்களும் இடுப்பில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அரை ஆடையும் அதில் குறுவால் உரையும் காண்பிக்கப்பட்டுள்ளது.

 இரண்டாவதாக உள்ள வீரனின்  இடக்கையில் நீண்ட நானுடன் கூடிய வில்லை ஏந்தியும் வலக்கையில் அழகிய வேலைப்பாடு நிறைந்த கைப்பிடி கொண்ட அம்பையும் ஏந்திய நிலையிலும் அவரது தலையில் கொண்டையும் கை மணிக்கட்டில் காப்பு வளையமும் இடையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த முட்டி வரை உள்ள அரை ஆடையும் இடுப்பில் உறையுடன் கூடிய குறுவாளும்   கால்கள் சற்று வளைந்து வலது பக்கமாக முதல் வீரனை பின்தொடர்ந்து செல்லும் நிலையிலும் உள்ளார்.

இவர்களது தலைப் பகுதிக்கு மேலே 6 வரிகள் உள்ள துண்டு கல்வெட்டு வாசகம்

1.ஸ்ரீ மது 

2.உடையார் 

3.மஹாமண்

4.விபாடன்மோ

5.டையாருடன்

 6.பாதுகாப்பாக

என்று உள்ளது மற்ற எழுத்துக்கள் சிதைந்து படிக்க இயலாத நிலையில் உள்ளது இவ்வரிகளை கொண்டு விஜயநகர மன்னர் காலத்தில் அவரது ஆட்சியின் கீழ் இருந்த குறுநில மன்னர் ஒருவரின் பாதுகாப்பிற்க்காக இருந்த மெய்க்காப்பாளர்கள் இருவர் போரில் குறுநில மன்னரின் உயிரைக் காக்க வீரமரணம் அடைந்துள்ளார்கள்.  

அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த நடுகல் உள்ளதுஎன்பதை அறிய முடிகிறது உடையாமல் முழு கல்வெட்டுடன் கூடிய நடுகல் கிடைத்திருந்தால் எந்த ஆண்டு எப்பொழுது யாருக்காக எந்த போரில்  எந்த இடத்தில் இந்த வீரர்கள் மாண்டார்கள் என்ற விவரம் முழுமையாக கிடைத்திருக்கும். 

உடைந்த நிலையில் காணப்படுவதால் முழு தகவலை அறிய இயலவில்லை இந்த நடுகல்லின்  கல்வெட்டுகளை படித்து ஆராய்ந்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் அவர்களும் மேற்கண்ட  செய்தியை உறுதி செய்துள்ளார்கள்.

இப்படி கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அறிய வரலாற்று ஆவணம் யாரும் கவனிப்பாரின்றி கேட்பாரின்றி அழியும் தருவாயில் புதர்களுக்கு இடையில் புதைந்து மறையும் அபாய நிலையில் உள்ளது. 

எனவே தொல்லியல் துறையினர் உடனடியாக கவனம் செலுத்தி அதைப் பாதுகாத்து திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் இது காலத்தின் கட்டாயம் ஆகும் என அவர் தெரிவித்தார்


No comments

Thank you for your comments