Breaking News

ஒப்பந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சு.,

சென்னை:

தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு 30சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு ஆணைகளை வழங்கி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, 

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிற 28,100 பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தம் உயிரை துச்சமென நினைத்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் அரசு பெருமை கொள்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிபவர்கள் ஊதிய உயர்வு கோரி எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் சிலரின் தூண்டுதலின்பேரில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு பேர் என்னைச் சந்தித்து நான்கு மாதங்களாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். இப்படி பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்பதை அவர்களிடம் எடுத்துரைத்தோம். தங்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடுவதில் தவறொன்றுமில்லை. போராட்டம் நடத்தினால் கோரிக்கைகள் வெற்றி பெறுமா என்று தெளிவாக தெரிந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.


No comments

Thank you for your comments