வரதராஜ பெருமாள் கோவில் பெருந்தேவி தாயாருக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளித் தடிகள்
காஞ்சிபுரம், அக்.4-
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பெருந்தேவி தாயாருக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 20கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட தடிகளை சென்னையைச் சேர்ந்த பக்தர் சமர்ப்பித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் கோவிலுக்குள்ளேயே உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்லும் வகையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்கின்ற பக்தர் தனது சொந்த செலவில் சுமார் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் 9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி 20 கிலோ வெள்ளித் தகடு பதித்து வெள்ளித்தடிகளை செய்திருந்தார்.
இன்று ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் தாயார் சன்னதிக்கு வெள்ளிதடிகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
பெருந்தேவி தாயார் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெருந்தேவி தாயாருக்கு விழாக்காலங்களில் பயன்படுத்த கோவில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments