நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு- திடீர் சாலை மறியல்... போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே நூறு வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர், மண்வெட்டி,பாண்டுடன், கோலியனூர் பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோலியனூர் அருகே உள்ள, மழவராயனூர் கிராமத்தில்,ஊரக மகாத்மா காந்தி நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் வெங்கடேசனிடம் கேட்டபோது, “கிராம மக்களுக்கு அரசு நிர்ணயித்த 280 ரூபாய் ஊதியத்திற்கு பதிலாக 120 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணிக்கே வராதவர்களை பணியில் இருந்ததாக, அவர்கள் பெயர்களைச் சேர்த்து முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
அதன்படி , அக்கிராம மக்கள் இன்று கோலியனூர் பன்ருட்டி சாலையான ஆழங்கால் பகுதியில் மண்வெட்டி , கடப்பாரை, பாண்டுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மாற்று திறனாளிகளுக்கு 180 ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். கிராம மக்களின் சாலை மறியல் காரணமாக பண்ருட்டி சாலையில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

No comments
Thank you for your comments