Breaking News

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார் - முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா நேரில் அஞ்சலி

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் இன்று (1-9-2021) காலை சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சசிகலா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி,ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெருங்குடி மருத்துவனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின், மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இபிஎஸ் நேரில் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

சசிகலா நேரில் ஆறுதல்



ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமான நிலையில்  வி.கே. சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார்.

தேனியில் நல்லடக்கம்

விஜயலட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விஜயலட்சுமியின் உடல் இறுதி காரியங்களுக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது

அரசியல் தலைவர்கள் இரங்கல்

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; அண்ணன் ஓபிஎஸ் மீளாத் துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான  ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்  மனைவி விஜயலட்சுமி மறைந்த  செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து  துயரில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்






No comments

Thank you for your comments