Breaking News

நீட் தேர்வு பிரச்சினை - சட்டமன்றத்தில் இபிஎஸ் எழுப்பிய வினாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்


இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை.. 

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல்..

சென்னை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, நீட் தேர்வு விலக்குக்கான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அப்போது, முதலமைச்சர் மு.க.பேசியதாவது, 

நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால், அவர்களின் கல்வித்தரம் பாதிக்காது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ள மசோதாவை அனைத்துக் கட்சியும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி – முதலமைச்சர் பதில்

இதைத் தொடர்ந்து பேசிய பழனிசாமி,' தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராகாமல், தற்போது தேர்வு எழுத முடியாத அச்சத்தில் மாணவர் தனுஷ் உயிரிழந்துள்ளார்,' என குறிப்பிட்டார்.

நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எழுப்பிய வினாவிற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில் -  விவரம்:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் :

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) ஏன், மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள்கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. 

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது. (மேசையைத் தட்டும் ஒலி) 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான்.

நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான்.

குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான்.

இப்போது உயிரழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது, திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான். 

ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள்.

சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அ.தி.மு.க.-விற்கு இல்லை . அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். 

ஆனால் நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான்  அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை இரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதிலாக சொல்லி அமைகிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.


No comments

Thank you for your comments