கேரளாவில் புதிய துறைமுகம் ... தமிழக, கேரள அமைச்சர்கள் நேரில் ஆலோசனை
சென்னை
கேரளா மாநிலத்தில் அமையும் புதிய துறைமுகம், ஆழ்கடல் பகுதியில் அமையவுள்ளதால், அங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும், பொருட்கள் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என கேரளா மாநில அமைச்சர் அஹமது தேவர் கோவில் அவர்கள், தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களை கேரளா துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறை அமைச்சர் அஹமது தேவர் கோவில் அவர்கள் இன்று (19-9-2021) தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
அப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் செயல்பாடுகள் அதிலுள்ள வசதிகள் குறித்தும், கேரளாவில் உள்ள சிறு துறைமுகங்கள் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்திளார்கள் சந்திப்பில் பேசியதாவது,
கேரளாவில் உள்ள துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி கோரப்பட்டது. புதிதாகக் கேரளாவில் அமையும் துறைமுகம், ஆழ்கடல் பகுதியில் அமையவுள்ளதால், அங்கிருந்து அனைத்துப் பகுதிகளுக்கும், பொருட்கள் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும்.
இப்பணிக்குத் தமிழ்நாடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் கடிதமாகப் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய முடிவை அரசு தெரிவிக்கும் எனக் கூறினார்.
கேரளா அமைச்சர் அஹமது தேவர் கோவில் அவர்கள் பேசும் பொழுது,
எங்களது கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை அகழ்வராய்ச்சி மூலம் கண்டெடுக்கும் தமிழ்நாட்டின் முயற்சிக்கு, கேரள அரசு உறுதுணையாகவும், தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் தயராகவும் உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் மாநிலத் துறைமுக அலுவலர் எம்.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.



No comments
Thank you for your comments