Breaking News

ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு

காஞ்சிபுரம்:

ஏகாம்பரநாதர் கோவில் இரட்டை திருமாளிகையில் கல்தூண்கள் காணவில்லை என்ற புகார் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், மூன்றாம் பிரகாரத்தில், இரட்டை திருமாளிகை உள்ளது. மன்னர்கள் காலத்தில் திருவிழாக்கள் நடக்கும்போது அந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார். இம்மண்டபம் சிதிலமடைந்து 100 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை, 2012, 2014, 2015ல் தலா 50 லட்சம் ரூபாய் என, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணி நடந்தது. 

அப்பணியின்போது, இரட்டை திருமாளிகையில் இருந்த பழமையான கல்தூண்கள் காணவில்லை என பக்தர்கள் சார்பில், 2018ல் புகார் அளிக்கப்பட்டது. 

அந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர், காவலர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டனர். 

கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஸ்தபதி மற்றும் புகார்தாரர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைப்பெற்றது.

No comments

Thank you for your comments