காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு... குற்றவாளி தப்பி ஓட்டம்...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு வழக்குகளுக்கான விசாரணை நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் பல்வேறு சிறைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை 10.40 அளவில் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு விசாரணைக்காக ஆஜர் படுத்த சிறையில் இருந்து குற்றவாளி ஒருவரை போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த குற்றவாளி திடீரென போலீசாரை ஏமாற்றி விட்டு நீதிமன்ற வளாக சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் குற்றவாளியை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திடீரென நடைபெற்ற இச் சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், என்ன நடந்தது என்றே தெரியாமல் திகைத்து நின்றனர்.
இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments