மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
காஞ்சிபுரம்:
வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 62 வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்திட மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியவராகவும், தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், எல்.எல்.ஆர். சான்று பெற்றவராகவும், குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
62 நிறுவனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் பட்சத்தில் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், சாதிச்சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநர் உரிமம்/LLR (Leaners Licence Registration), கல்வித் தகுதி சான்று (குறைந்தபட்சம் 8-வது தேர்ச்சி/தோல்வி), வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்றில் மாவட்ட வக்ஃபு கண்காணிப்பாளரின் மேலொப்பம் பெற்று தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 30.09.2021-க்குள் அனுப்ப வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Post Comment
No comments
Thank you for your comments