ஜனநாயக கோவிலின் புனிதம் அழிந்துவிட்டது... மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்
புதுடெல்லி:
ஜனநாயக கோவிலாக கருதப்படுவது நாடாளுமன்றம். எதிர்கட்சி உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்பட்டுள்ளது என்றும் தூக்கமில்லாமல் தவித்ததாக கூறி அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கண்ணீர் சிந்தினார்.
ஜனநாயக கோவிலில் புனிதம் சீர்கெட்ட காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை சமூக இணையதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கியது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இவ்வாறு விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நடந்துகொண்ட விதம் குறித்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உருக்கமாக பேசினார்.
மாநிலங்கள் அவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது,
ஆகஸ்ட் 10ஆம் தேதி அவை செயலாளர் இருக்கும் இடத்தில் மேஜை மீது சிலர் ஏறி அமர்ந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். சிலர் அந்த மேஜை மீது ஏறி நின்று கொண்டு இருந்துள்ளனர். இந்த காட்சியை பதிவு செய்து சமூக இணையதளங்களிலும் வெளியிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த அவமதிப்பு நடந்துள்ளது.
இந்த அவமதிப்பு தூண்டுதல் என்னவாக இருக்கும் என்றும் இந்த அமைப்புக்கான காரணங்கள் என்ன என்பதை அறிய ஆய்வு செய்ததாகவும் வெங்கையாநாயுடு குறிப்பிட்டார் .
மேஜையின் மீது நின்ற சிலர் கருப்புக் கொடியை காட்டியிருக்கிறார்கள். சிலர் கோப்புக்களை தூக்கி வீசி எறிந்து இருக்கிறார்கள். என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
விவசாயி விவசாயிகள் போராட்டம் பற்றிய விவாதம் துவங்கியதும் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கோயிலின் கருவறைக்குள் எல்லோரையும் அனுமதிப்பதில்லை. அந்த அனுமதிக்கப்படாத பகுதிக்குள் செல்வதே கோவிலை அவமதிப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல அவையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அமர்வதற்கான இருக்கைகள் முன் போடப்பட்டுள்ள மேஜைகள் மீது ஏறி நிற்பது அதேபோன்ற அவமதிப்புச் செயலாகும் என்று வெங்கையா நாயுடு கூறினார். என்னுடைய வருத்தத்தையும் கவலையையும் தெரிவிப்பதற்கு உரிய வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை சென்ற இரவு நான் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
அப்போது வார்த்தைகள் வராமல் தடுமாறியதுடன் சில நொடிகள் கண்கலங்கியபடி வெங்கய்யா நாயுடு கண்ணீர் சிந்தினார்.
விவசாயிகள் போராட்டம் பற்றி அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்த காரணத்தினால் தான் அவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்த விவாதத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அவை உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய கருத்தை அவையில் பதிவு செய்து இருக்கலாம். ஆனால் அவையில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளை கேமரா மூலம் பதிவு செய்து சமூக இணையதளங்களில் அவற்றை பதிவு செய்திருக்கிறார்கள்.
இதன் மூலம் அவை உறுப்பினர்கள் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்பதை நாட்டுக்கு காட்டியிருக்கிறார்கள் மிகவும் துக்ககரமான விஷயம் என்னவென்றால் .ஜனநாயகத்தின் கோவிலில் உறுப்பினர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவையை அவமதித்து உள்ளனர்.
இந்த நடவடிக்கையை குறித்து ஆழமாக உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டும்... இத்தகையநடவடிக்கைகளுக்கு நிவாரணம் என்ன என்றும் உறுப்பினர்கள் பரிசீலிக்க வேண்டும்... இவற்றை செய்யத் தவறினால் நமது நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருத்தமற்றதாக மாறிவிடும்.
இன்னும் சில நாட்களில் இந்தியாவின் சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு துவங்குகிறது. அதனை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்நிலையில் நம்முடைய உறுப்பினர்களுக்கு 2 வாய்ப்புக்கள் முன் உள்ளன. ஒன்று மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி ஆக உறுப்பினர்கள் மாறுவது அல்லது நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமாக சீர்குலைப்பவர்களாக மாறுவது.
இந்தச் சம்பவங்களை ராஜ்யசபா ஒளிபரப்பவில்லை என்று சில உறுப்பினர்கள் கவலைப்பட்டார்கள். ஏன் ஒளிபரப்பவில்லை என்று எனக்குத் தெரியவில்லை நிச்சயமாக இதை ஒளிபரப்பிக் இருக்கலாம் அதை நான் தடுக்க மாட்டேன்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உருக்கமாக கூறி கொண்டிருந்தபொழுது உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறிவிட்டதாகவும், அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டதாகவும் அவைத்தலைவர் கண்ணீர்மல்க பேசினார்.
அத்துடன் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்
No comments
Thank you for your comments