தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி.... ஹெச்.ராஜா கடும் விமர்சனம்
சென்னை:
தமிழ்நாட்டில் தற்போது கடன்கார ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது, திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கடன்களை வாங்கி குவித்து வருகிறது என்று பாஜக மூத்த உறுப்பினர் ஹெச். ராஜா பரமக்குடியில் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார். கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு எவ்வளவு பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என்று அவர் இதில் விளக்கி இருந்தார்.
தமிழ்நாட்டின் மொத்த கடன் 2021-22ம் ஆண்டின் படி ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பொதுக்கடன் மட்டும் பொதுக்கடன் 26.69 சதவிகிதமாக உள்ளது. தமிழ்நாட்டில் கடன் சுமை குறித்தும் வருவாய் இழப்பு குறித்தும் விரிவாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதில் விளக்கி இருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய திமுக ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டு இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பல கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுவிட்டது என்றும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச். ராஜா அளித்த பேட்டியில், ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் திமுக அரசு கடன்கார அரசாக மாறியுள்ளது. தற்போது நமது மாநிலத்தில் நடந்து கொண்டு இருப்பது கடன்கார ஆட்சிதான். முதல் 90 நாட்களிலேயே தமிழ்நாட்டில் திமுக அரசு சார்பாக 40 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டு இருக்கிறது.
மோசமான நிர்வாகத்தால் இவ்வளவு கோடி கடன்களை வாங்கி உள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் இவர்கள் 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் உள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை மேலும் அதிகரிக்க போகிறது. கடன் வாங்குவதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் கடன் வாங்கினால் அதை திருப்பி கொடுக்கும் அளவிற்கு திறன் இருக்க வேண்டும். திருப்பி கொடுக்க முடியும் தொகையை மட்டுமே கடனாக வாங்க வேண்டும். வருமானத்தை விட அதிக கடன் வாங்கி, தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றுகிறது.
முதலில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்று திமுக அறிவித்து இருந்தது. ஆனால் இப்போது நிதி நிலையை காரணம் காட்டி தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார். திமுக வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.
இதற்கு முன்பும் இதேபோல்தான் ஆட்சிக்கு வந்த பின் வாக்குறுதிகளை மாற்றினார்கள். 1967ல் கூறிய அதே ஏமாற்றுத் தனத்தை மீண்டும் திமுக கொஞ்சமும் மாறாமல் அப்படிய செய்கிறது.
1967ல் மூன்றுபடி அரிசி கொடுக்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் ஒருபடி அரிசி மட்டுமே கொடுத்தனர். ஆனால் அதையும் ஒரே ஒரு ரேஷன் கடையில் மட்டுமே கொடுத்தனர். அதேபோல் இப்போது மீண்டும் வாக்குறுதியில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதிகமாக கடன் வாங்குவதும், நிதி பற்றாக்குறையும் பண வீக்கத்தை அதிகமாக்கும். தமிழ்நாட்டின் அரசு பொறுப்போடு செயல்படவில்லை.
இதே நிலை சென்றால் அவசிய தேவைக்கு கடன் வாங்கும் தகுதியை கூட தமிழ்நாடு அரசு இழந்துவிடும். 2006ல் கலர் டிவி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக கடன் வாங்கப்பட்டது. அதுவரை 28,000 கோடி ரூபாயதாக இருந்த கடன் புதிய உச்சம் தொட்டது. அந்த திட்டத்திற்கு பின் 5 லட்சத்து எழுபத்தி ஏழாயிரம் கோடியாக தமிழ்நாட்டின் கடன் புதிய உச்சம் தொட்டது.
அரசின் வருவாயில் 30 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வாங்கி விட்டனர். இதை எப்படி திருப்பி கொடுக்க முடியும். 70% வருமானம் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு சென்றுவிடும். அப்படிப்பட்ட சமயத்தில் மீதம் உள்ள 30 சதவிகிதம் வருவாய் வைத்து எப்படி கடன் கொடுப்பார்கள். இது வட்டிக்கே போதுமாக இருக்குமே, இதை வைத்து எப்படி கடனை திருப்பி கொடுப்பார்கள், என்று ஹெச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக பிடிஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், 2016-2021 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 1999-2000 - ரூ.18,989 கோடி கடன் இருந்தது. இது 2000-2001 - ரூ.28,685 கோடி ஆக உயர்ந்தது.2011-2012 - ரூ.1,03,999 கோடி2015-2016 - ரூ.2,11,483 கோடியாக இந்த கடன் உயர்ந்தது. கடந்த 2017-2018 - ரூ.3,14,366 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டில் மொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் முதலீடு செய்ய கடன் வாங்குவார்கள். ஆனால் இங்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்காக கடன் வாங்கி உள்ளனர். அதிக வட்டிக்கு கூடுதல் கடன் வாங்கி உள்ளனர், இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் ரூ.2,63,976 கடன் உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 சதவிகிதமாக உள்ளது, என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு இருந்தார்.

No comments
Thank you for your comments