Breaking News

முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்... விசாரணை அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல்...

சென்னை

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கையை ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர்.

கடந்த 2018ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது ரூ. 280 கோடி அளவுக்கு பல்வேறு ஊழல், முறைகேடு புகார்கள் எழுந்தன.

இது தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினா் சூரப்பா மீதான முறைகேடு குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினா் பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெங்கடேசன், முன்னாள் பதிவாளா் கருணாமூா்த்தி உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் விசாரணை நடத்தினா்.

இறுதியாக சூரப்பாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு எழுத்துப்பூா்வமாக பதில் அளிக்குமாறு கலையரசன் குழுவினா் நோட்டீஸ் அனுப்பினா். அதற்கு சூரப்பாவும் விரிவாக பதில் அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. 

சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகவும், இதற்கான சான்றுகளும் கிடைத்திருப்பதாகவும் ஏற்கெனவே விசாரணைக் குழு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் துணைவேந்தர் சூரப்பா மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments