Breaking News

பாராலிம்பிக் போட்டி- வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா



டோக்கியோ:

குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் 5வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார்.

34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் ஜாங் மியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். 11 முறை தொடர்ச்சியாக ஜாங் மியாவிடம் தோல்வி கண்டு இருந்த பவினாபென் பட்டேல் அவருக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை கைப்பற்றினார்.

இதன் மூலம் குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பவினாபென் பட்டேல் பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய அணி மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துள்ளார். அவரின் அசாதாரண உறுதியும் திறமையும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அசாதாரண சாதனைக்கு என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பவினாபென் பட்டேல் தனிச்சிறப்புக்குரிய வரலாற்றை படைத்துள்ளார். பவினா பட்டேல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை நாட்டிற்கு கொண்டு வர உள்ளார். அதற்காக எனது வாழ்த்துக்கள். பவினாவின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்  மேலும்  இளைஞர்களை விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கும்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பவினாபென் பட்டேலுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவின் மகளான பவினா பட்டேல் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உங்கள் வெற்றியால் தேசம் பெருமை கொள்கிறது என  பவினாபென் பட்டேலுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments