அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - விளாசிய தங்கம் தென்னரசு
சென்னை:
மூன்று புதிய வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்ததன் மூலம் அ.தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று.
சட்டப்பேரவையில், வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்ததன் மூலம் துரோகம் இழைத்துள்ளது. விவசாயிகள் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆதரித்திருக்க வேண்டும். தெரிந்தே, வேண்டுமென்றே அ.தி.மு.க. துரோகம் செய்துள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
வேளாண் சட்டங்களை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது, இந்தத் தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் உள்நோக்கமும் தெரிய வந்துள்ளது.
மேலும், விவசாயிகள் நலனுக்காக தான் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதில் அரசியல் இல்லை.... சட்டமன்றத்தில் அனைத்துப் பிரதான கட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும்.
ஆனால், அவர்களோ வெளிநடப்பு செய்திருக்கின்றனர்... இதன்மூலம் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்டவெளிச்சமாகி உள்ளது என தெரிவித்தார்.

No comments
Thank you for your comments