Breaking News

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயின் 3வது ஆண்டு நினைவு தினம்-அரசு மரியாதை

புதுடெல்லி, ஆக.17-

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வாஜ்பேயின் நினைவிடத்தில் நேற்று மலர் மரியாதை செலுத்தினர்.


பா.ஜனதா தலைமையிலான அரசின் முதல் பிரதமரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தனது 93வது வயதில் மரணம் அடைந்தார். அவரது 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பா.ஜ.க தலைவர் ஜெ பி நட்டா, பா.ஜ.க நிர்வாகிகள் ஆகியோரும் சென்று மரியாதை செலுத்தினார்கள்.


வாஜ்பாய் குடும்பத்தினரும் நேற்று காலை அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது;

“திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் கனிவான ஆளுமை, அன்பான குணநலன், அவரின் நகைச்சுவை உணர்வு, அவர் நாட்டு முன்னேற்றத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் ஆகிய அனைத்தையும் நாம் நினைவு கூர்கிறோம்.


திரு.அடல் அவர்கள் நமது குடிமக்களின் நெஞ்சில் என்றும் வாழ்கிறார். அவரது நினைவு நாளான இன்று, சைதவ் அடல் என்ற அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினேன்”.



No comments

Thank you for your comments