15 டன் ரேஷன் அரிசி கடத்தல் தனிவட்டாட்சியர் பறிமுதல்
காஞ்சிபுரம், ஆக.19-
காஞ்சிபுரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை, காஞ்சிபுரம் தாலுகா காவல் துறை போலீஸாருடன் இணைந்து காஞ்சிபுரம் தனி வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் குடிமைப்பொருள் அதிகாரிகள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி கரை பகுதியில் காஞ்சிபுரம் தாலுகா போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தியபோது லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து லாரியை குடிமைப்பொருள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments
Thank you for your comments