சென்னை உட்பட இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் - நாசா எச்சரிக்கை
வாஷிங்டன்:
பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change - IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது.
அதில், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள் பின் வருமாறு:
குஜராத் மாநிலத்தில் கண்ட்லா 1.87 அடி, ஒக்ஹா 1.96 அடி, பவுநகர் 2.70 அடி
மகாராஷ்டிராவின் மும்பை 1.90 அடி
கோவாவின் மோர்முகாவ் 2.06 அடி
கர்நாடகாவின் மங்களூர் 1.87 அடி
கேரளாவின் கொச்சி 2.32 அடி
ஒடிசாவின் பரதீப் 1.93 அடி
கொல்கத்தாவின் கிதிர்பூர் 0.49 அடி
ஆந்திராவின் விசாகப்பட்டினம் 1.77 அடி
தமிழகத்தின் சென்னை 1.87 அடி, தூத்துக்குடி 1.9 அடி
தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click 👉 IPCC Report
No comments
Thank you for your comments