நீதிபதிகள், அரசியல்வாதிகள், மூத்த பத்திரிகையாளர்கள் செல்போன்களில் மத்திய அரசு ஒட்டுக்கேட்டதா?.. கிளம்பிய சர்ச்சை!
புதுடெல்லி:
இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி, பல செய்தியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பரபரப்பு புகார் வெளியாகி உள்ளது. தி கார்டியன் நிறுவனம் உட்பட சர்வதேச ஊடகங்கள் இணைந்து நடத்திய விசாரணையின் முடிவில் இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம் உலகம் முழுக்க பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இஸ்ரேல் அரசுக்கு நெருக்கமானதாக கருதப்படும் இந்த நிறுவனம் டெல் அவிவ் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் எனப்படும் ஸ்பைவேர் சாப்டவேர்.
பெகாசஸ் என்பது போன், லேப்டாப் ஆகிய சாதனங்கள் மூலம் ஒரு நபரை உளவு பார்க்க, ஒட்டுக்கேட்க உதவும் ஸ்பைவேர் ஆகும். இந்த பெகாசஸ் சாப்ட்வேரை உலகம் முழுக்க அரசுகளுக்கு மட்டும் விற்பனை செய்வதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு அரசுகளுக்கு பெகாசஸ் தொழில்நுட்பத்தை இந்த என்எஸ்ஓ நிறுவனம் விற்பனை செய்துள்ளதாம். தீவிரவாதிகள், சதித்திட்டம் தீட்டுபவர்கள், எதிரிநாடுகளை உளவு பார்ப்பதற்காக மட்டுமே இந்த பெகாசஸ் தொழில்நுட்பத்தை கொடுக்கிறோம். இதில் மனித உரிமை மீறல்களை அரசு மேற்கொள்ள கூடாது என்று உத்தரவாதம் வாங்கி கொண்டு மட்டுமே பெகாசஸ் நுட்பத்தை விற்பனை செய்கிறோம் என்று என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உங்கள் போனில் இருக்கும் "பக்ஸ்" மூலம் உள்ளே நுழைய கூடியது, அல்லது உங்களுக்கு வரும் லிங்ஸ் எதையாவது நீங்கள் கிளிக் செய்தால் பெகாசஸ் உங்கள் போனுக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த பெகாசஸ் உங்கள் போனில் நுழைந்த பின் அதன் மூலம் உங்கள் போனை அரசு ஒட்டுக்கேட்க முடியும், உங்கள் மெசேஜ்களை படிக்க முடியும். உங்கள் போனின் கேமரா, மைக்கை உங்களுக்கு தெரியாமலே இயக்க முடியும். ஜிபிஎஸ் மூலம் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை கண்காணிக்க முடியும்.
இந்த நிலையில் பெகாசஸ் நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருக்கும் அரசுகள் தங்கள் நாட்டின் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், மத துறவிகள் என்று பலரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க 50000 பேரின் தொலைபேசி எண்களை பெகாசஸ் டேட்டா பேஸில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க 50000 நபர்களின் தொலைபேசி எண்களை பெகாசஸ் டேட்டா பேஸில் இருந்து "Forbidden Stories" என்ற பிரான்ஸ் ஊடகமும், அம்னெஸ்டி அமைப்பும் இணைந்து கைப்பற்றி உள்ளது. இந்த 50000 தொலைபேசி எண்களுக்கு சொந்தமானவர்களில் சிலரை கண்டுபிடித்து அவர்களின் போனில் பெகாசஸ் மால்வேர் இருந்துள்ளதா என்று இந்த அமைப்பு சோதனை செய்துள்ளது.
50000 போன் எண்களின் சில எண்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து, அவர்களின் போனை சோதனை செய்து, அதில் பெகாசஸ் மால்வேர் இடம்பெற்று இருந்ததா, ஒட்டுக்கேட்டு நடந்து இருக்கிறதா என்று சோதனை செய்துள்ளனர். அதன்படி 37 போனில் செய்யப்பட சோதனையில் அவர்களின் போனில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததற்கான ஆதாரத்தை கைப்பற்றி உள்ளனர். Forbidden Stories மற்றும் அம்னெஸ்டி அமைப்பு உலகம் முழுக்க 16 செய்தி நிறுவனங்களுடன் இணைந்து இந்த விசாரணையை செய்துள்ளனர்.
இந்தியாவில் தி வயர் செய்தி நிறுவனத்தின் உதவியுடன், பெகாசஸ் லிஸ்டில் இருந்த இந்தியர்கள் சிலரின் போன்களிலும் இந்த சோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களின் போனிலும் பெகாசஸ் மால்வேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் மால்வேர் உங்கள் போனிற்குள் வந்தால் அது ஒரு அடையாளத்தை விட்டு செல்லும், மற்ற வைரஸ்கள் போலவே இதுவும் அடையாளத்தை விட்டு செல்லும். அந்த அடையாளத்தை வைத்தே, உங்கள் போனில் பெகாசஸ் இருந்ததா இல்லையா என்று கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுக்க உறுதிசெய்யப்பட்ட 37 பெகாசஸ் அட்டாக்குகளில் 10 பேர் இந்தியர்கள். இன்னும் பல இந்தியர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள். அவர்களின் போன்களில் இன்னும் பெகாசஸ் குறித்த சோதனை செய்யப்படவில்லை. ஆனால் கசிந்த 50000 பேர் கொண்ட பெகாசஸ் லிஸ்டில் இவர்களின் எண்களும் இருந்துள்ளதால் இவர்களின் போனிலும் ஒட்டுகேட்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட நபர்களின் எண்கள் இந்த லிஸ்டில் இருந்துள்ளது. இரண்டு மத்திய அமைச்சர்கள், மூன்று எதிர்கட்சித் தலைவர்கள், ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி, சில அரசு அதிகாரிகள், சில ஆராய்ச்சியாளார்கள், 40 பத்திரிக்கையாளர்கள், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி என்று பலரின் போன் எண்கள் இந்த லிஸ்டில் இருந்துள்ளது
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஒருவரின் எண்ணும் இந்த லிஸ்டில் இருந்துள்ளது. ஆனால் அவர் இப்போதும் அந்த எண்ணை பயன்படுத்துகிறாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்தியாவில் கவனிக்கத்தக்க ஊடகவியலாளர்களான சுவாதி சதுர்வேதி, ரோகினி சிங், சித்தார்த் வரதராஜன், பிரேம் ஷங்கர் ஜா உள்ளிட்ட பலரின் எண்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா மட்டுமின்றி மேலும் 9 நாட்டின் அரசுகள் இப்படி போன்களை ஓட்டுக்கேட்ட விவகாரத்தில் சிக்கி உள்ளது. பாகிஸ்தான், அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, பாகிஸ்தான், பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகள் இப்படி தங்கள் நாட்டில் ஒட்டுகேட்டுள்ளது. மெக்சிகோதான் அதிகமாக ஒட்டுகேட்டுள்ளது. சவுதியில் 85 மனித உரிமை ஆர்வலர்கள், 189 செய்தியாளர்கள் உட்பட 600 பேரின் எண்கள் இந்த லிஸ்டில் உள்ளது.
முக்கியமாக கொல்லப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் காசாக்கியின் மனைவியின் காசாக்கி மரணத்திற்கு முன் ஒட்டுகேட்கப்பட்டு உள்ளார். இந்த விவகாரத்தை இந்திய மத்திய அரசு முற்றிலுமாக மறுத்து உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களின் அடிப்படை சுதந்திரத்தில், அடிப்படை உரிமைகளில் அரசு தலையிடாது.
மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதிலும், அதில் அத்துமீறல்கள் நிகழாமல் தடுப்பதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசாங்க நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாத ஒட்டுக்கேட்பு பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு நேற்று இந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments
Thank you for your comments