தனியார் பள்ளிகளுக்கு கடுமையான உத்தரவு..!- பள்ளிக் கல்வித்துறை...!
சென்னை:
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் முதல் தவணையில் 40 சதவிதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் மொத்த கல்வி கட்டணமே 75 சதவீதம் தான் இந்த ஆண்டு வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் முதல் தவணை குறித்து தெளிவாக கேட்டு 40 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 75 சதவீதம் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இந்த கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள், முதல் தவணையில் 40 சதவீதமும், 2ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய முடியும்.
கொரோனா காரணமாக கடந்த 2021-22ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்று வரை நடைபெறவில்லை. ஆன்லைனில் தான் வகுப்புகள் நடக்கின்றன. ஆனால், ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், முழு கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றன. இது பற்றி பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கட்டண விவகாரம் தொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் " தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் 24 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2021-22ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்றும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என புகார்கள் வருகின்றன.
தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்றாலும் இரண்டாவது முறை சுற்றிக்கையில் எச்சரிக்கை செய்துள்ளது. 40 சதவீத கட்டணத்தை செலுத்தலாம். மீதி கட்டணத்தை எப்போது வசூலிக்க வேண்டும் என்று அரசு இனி மேல் தான் அறிவிக்கும் என்பதால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்கலாம்.
ஆனால் தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்றுவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்...

No comments
Thank you for your comments