மேகதாது அணை பிரச்சினை.. சட்டப்படி தடுத்தே தீருவோம்.. துரைமுருகன் ஆவேசம்
சென்னை:
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கு நல்லதல்ல என்று விமர்சித்துள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசை இதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல என்றும் இதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்வது காவிரிதான். டெல்டா பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் காவிரி ஆற்றை நம்பியே உள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் புதிதாக அணைக் கட்டும் பணிகளில் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, "மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. தமிழ்நாடு அரசு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது . கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாகப் பரிசீலிக்கும்" என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொண்மைய்யா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நீரை இடைமறித்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது.
மேலும், மத்திய அரசின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று தீர்ப்புரைத்திருப்பதை கர்நாடக மாநில அமைச்சர் அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன்.
இவ்வளவையும் மீறி அணையைக் கட்டுவோம் என்று சொல்வது, நடுவன் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வது போல் தெரிகிறது.
இது ஒரு ஜனநாயக நாடு. இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்ததல்ல. மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும் சட்டப்படி அதைத் தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments
Thank you for your comments