கையடக்க கணினி கருவியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் மனம் உருக பாராட்டு
சென்னை:
எஸ்.எஸ். மாதவ்வின் கண்டுபிடிப்பை பாராட்டிய முதல்-அமைச்சர் கணினி தொடர்பான அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ். மாதவ். இவர் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
கணினி மொழிகளான ஜாவா, சி, சி பிளஸ் பிளஸ் ஆகியவற்றை படித்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க மினி சி.பி.யூ. கருவியை கண்டுபிடித்து உள்ளார்.
இதற்காக இரண்டு ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார். இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விப்பட்டார்.
இதையடுத்து மாணவர் எஸ்.எஸ். மாதவ்வை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டினார். இக்கருவியை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல ஏதுவாக ஒரு நிறுவனத்தை தொடங்கி மிகவும் குறைந்த விலைக்கு அதை விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலை கேட்டறிந்த முதலமைச்சர் மாணவரை வாழ்த்தினார்.
எஸ்.எஸ். மாதவ்வின் கண்டுபிடிப்பை பாராட்டிய முதலமைச்சர் கணினி தொடர்பான அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். நிகழ்ச்சியின்போது, எஸ்.எஸ். மாதவ் பெற்றோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments