மத்திய அரசின் ஜீவன் ரக்ஷாபதக் விருது பெற விண்ணப்பிக்கலாம்..! - கடைசி நாள் 10.08.2021
வேலூர், ஜூலை 29-
உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளைச் செய்து உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு
சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்,
உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும்
ஜீவன் ரக்ஷா பதக்
ஆகிய தொடர் விருதுகள் ஓவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை தாமதமின்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் முழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயமடைந்தவர்கள், மின்சார சாதனங்களால் தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுபவர்கள், விலங்கினங்களால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்கத்தில் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துக்களில் சிக்கியவர்களை உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீரச்செயல்கள் புரிந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.
சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடைய இத்தகைய வீர சேவை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் விதத்திலும் இவர்களைப் போல் மற்றவர்களும் ஆபத்துக் காலத்தில் உதவிகள் புரிவதை ஊக்குவிக்கும் விதத்திலும் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் விவரம் பின்வருமாறு-
1) 1.10.2019 முதல் தற்போது வரையிலான காலத்திற்குள் ஆற்றிய வீர சேவையைத் தெளிவுபடுத்தி உள்ளடக்கிய கருத்துருக்கள் நாளிதழ்களில் வெளிவந்த செய்திக்குறிப்புகள் போன்ற சான்றுகளுடன் சமர்ப்பிக்கவேண்டும். 1.10.2019க்கு முந்தைய வீரதீர சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது ஆகையால் குறித்த காலத்திற்குண்டான சாதனைகளை மட்டுமே அனுப்பிட வேண்டும்.
2) விபத்துக்கள், ஆபத்துக் காலங்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்காத்த சமுதாயத்திலுள்ள வேலுலீர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
3) ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்தோர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி சேவைத் துறையினர் ஆகியோர் தம்முடைய பணிநேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
4) மத்திய அரசின் உள்துறை சார்பில் தரப்படும் இவ்விருது பெறத் தகுதியானவர்களை மாண்புமிகு பாரதப் பிரதமர் மற்றும் பாரத தேசத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கு உயர் விருதுக் குழு பரிந்துரைக்கும்.
5) விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.08.2021 ஆகும்.
6) மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments