ஆயிரம் பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை - எடப்பாடி பழனிசாமி
சேலம்:
தடுப்பூசி மையம் தொடர்பான விவரங்களை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பிறகு நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். ஆகவே, தடுப்பூசி மையம் தொடர்பான விவரங்களை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். எண்ணிக்கையை ஏற்றவாறு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தனர், தற்போது குழு அமைத்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தான் செயல்படுத்த முடியும் என தெரிந்தும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சசிகலா அ.தி.மு.க.வில் இல்லை, சசிகலாவுக்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற அவர், 10 பேர் அல்ல ஆயிரம் பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை. குறை சொல்வதை விட்டு விட்டு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுங்கள் எனவும் கூறினார்.

No comments
Thank you for your comments