Breaking News

நாளை முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்... டீ கடைகள், பேக்கரி கடைகளுக்கு அனுமதி – அரசு அறிவிப்பு

 சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் மக்கள் நலன் கருதி மேலும் சில தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நாளை முதல் தேநீர் கடைகள், பேக்கரி, இ-சேவை மையங்கள், கட்டுமான நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31-5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட 7 மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தேநீர் கடைகளுக்கு அனுமதி

பார்சல் முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை. 

பேக்கரி, இனிப்பு கார கடைகளுக்கும் அனுமதி

மேலும், பேக்கரி, இனிப்பு கார கடைகளுக்கும் அனுமதி பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம்.  இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

இ-சேவை மையங்களுக்கு அனுமதி

பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. 

கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு

தமிழ்நாடு முழுவதும் 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள கடைகளில் நாளை முதல் மது விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 18 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை விவரம் வருமாறு:

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பணியில் இருக்க வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மதுபானை சில்லறை விற்பனைக் கடையின் முன்புறம் மதுபானம் வாங்க வரும் நபர்களின் கூட்டத்தை 2 பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்கு படுத்த வேண்டும்.

மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் போதும் மூடும் போதும் உட்புறமும், வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் ஒரு நாளைக்கு 2 முறை தெளிக்க வேண்டும்.

மதுபானம் வாங்க வரும் நபர்கள் வரிசையில் நின்று வருவதற்காக 1 அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.

ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்க வேண்டும்.

மதுபான கடைகள் திறக்கும் போதும், மூடும் போதும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முககவசம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை ஆகியவற்றினை பயன்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடையின் நுழைவு வாயிலில் ஒரு பணியாளர் மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிடைசர் வழங்கிய பின்னர் மதுபான சில்லறை விற்பனைக் கடைக்குள் அனுமதிக்கும் பணியினை கட்டாயம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடை பணியாளர்கள் மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுபான விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக் கூடாது.

மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.

டாஸ்மாக் கடையில் விற்பனையின் போது சமூக ஆர்வலர்களை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments