Breaking News

தனியார் பள்ளிகள் 75% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

கரூர்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடப்பாண்டில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். மைய நூலகத்தில் நூலக இருப்பு மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

“கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படியே நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதுவும் 2 தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அதன் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு அந்த பள்ளிகளில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்.

பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு எழும் பொழுது அதற்கான காவல்துறை வழக்கு செய்யப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என முதல்வர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக அதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் முடிவுகள் படியே தமிழக அரசு செயல்படும். தமிழகம் முழுதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என ஆய்வு செய்யப்படுகிறது.

பள்ளிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஊரடங்கு தொடர்பான முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டால் அதற்காக தயார் நிலையில் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments