பிளஸ்-2 மதிப்பெண் கணக்கீடு முறை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில், 11, 12ம் வகுப்பில் செய்முறை, அகமதிப்பீடு தேர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவார்கள்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மாணவ-மாணவிகள் தேர்வு எழுதக்கூடிய சூழல் இல்லாத காரணத்தினால் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால், அவர்களுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான வழிமுறைகளை அரசிடம் தெரிவிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அவர் கூறியதாவது:
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து 20 சதவீதம் கணக்கிடப்படும். ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும் கணக்கிடப்படும்.
11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு 10, 11 எழுத்துத்தேர்வு மதிப்பெண், செய்முறைத்தேர்வு மதிப்பெண்களாக மாற்றப்படும்.
11ம் வகுப்பு எழுத்துத்தேர்வில் தோல்வி அடைந்திருந்த மாணவர்களுக்கு 35 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும்.
11, 12ம் வகுப்பில் செய்முறை, அகமதிப்பீடு தேர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்படுவார்கள்.
மதிப்பீடு முறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். கொரோனா பரவல் குறைந்தவுடன் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.





No comments
Thank you for your comments