நடிகை விந்தியா தீடீர் என மாரடைப்பால் மரணம் - போஸ்டரால் பரபரப்பு....
சென்னை:
நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா, திடீர் மாரடைப்பால் மரணம் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த நடிகை விந்தியா, உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி என்று அசத்தலாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் .
கோவையை பூர்வீகமாகக் கொண்ட நடிகை விந்தியா 1999-ம் ஆண்டு வெளியான சங்கமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு நடிகை பானு ப்ரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட விந்தியா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பின்னர் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012-ம் ஆண்டு விந்தியா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார். பின்னர் வட்டப்பாறை உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களி நடித்த விந்தியா நடிப்பை நிறுத்திக் கொண்டார்.
அதன் பின்னர் அரசியலில் தனது கவனம் செலுத்தத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் விந்தியாவுக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்குச் சென்று திமுகவிற்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி. திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்து போய்விட்டார்கள் போல. இந்தமாறி போஸ்டரா பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது ராசா”. என்றும் பதிவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments