Breaking News

இரவு ஊரடங்கு ரயில் பயணிகளுக்கு விலக்கு... இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டப்படி நடைபெறும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் இன்றிலிருந்து (20-4-2021) இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், இரவு ஊரடங்கின்போது  இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டப்படி நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுத்திட  மத்திய அரசு வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் நிலை தற்போது அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துகின்ற வகையில், 20ம் தேதி (இன்று) முதல் இரவு நேர ஊரடங்கினை அமல்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால், பேருந்து போக்குவரத்து தடைப்படும். ஆனால் இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 27 ரயில்களும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 45 ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியே செல்கின்றன.  ஹவுரா செல்லும் ரயில் மே 10-ம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயிலில் 3ல் ஒரு பங்கினரே பயணிக்கின்றனர். 1,200 இருக்கைகள் உள்ள ரயிலில் சுமார் 400 பேர் வரையே ரயிலில் பயணிக்கின்றனர். இதனிடையே இரவு நேர ஊரடங்கின் போது பயணம் செய்பவர்கள் தங்களுடைய டிக்கெட்டை காண்பித்து ஆட்டோ மட்டும் டாக்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என விலக்கு அளித்துள்ளது.

No comments

Thank you for your comments