இந்தியா - வங்க தேசம் இடையே ‘நட்புப் பாலம்’.... பிரதமர் மோடி திறந்து வைத்தார்..
அகர்தலா, மார்ச் 9-
இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் இடையே கட்டப்பட்டுள்ள மைத்திரி சேது (நட்புப் பாலம்) பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது, இரு நாடுகளிடைய புதிய அத்தியாயம் தொடங்க இந்த பாலம் உதவும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
திரிபுரா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் சப்ரோம் அருகே ஃபென்னி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது வங்க தேசத்தின் ராம்கர்ஹ் பகுதியை இணைக்கிறது. சுமார் 1.9 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்ட இந்த பாலம் கட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தலைநகர் அகர்தலாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் திறப்பு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதோடு திரிபுராவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த 3வது ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்பட்டது. இதில், கானொலிக் காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பலத்தை திறந்து வைத்தார். மேலும், ரூ. 3, 158 கோடி மதிப்பிலான 8 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், பாஜக தலைமையிலான அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், ‘கமிஷன் மற்றும் ஊழல் அரசை அகற்றி 3 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சாதனை படைத்துள்ளீர்கள்’, என கூறினார். முதல்வர் பிப்லாப் குமார் தெப் அரசு, மத்திய அரசின் ஆதரவுடன் தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக தெரிவித்தார்.
இந்த நட்புப் பாலம், தெற்கு அசாம், மணிப்பூர், மிசோராம் ஆகிய மாநிலங்களின் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், வங்க தேசத்துக்கும் புதிய வாய்ப்புகளை கொண்டுவரும் எனவும் மோடி குறிப்பிட்டார்.
வங்க தேச பிரதமர் சேக் ஹசினா, திறப்பு விழா குறித்து வீடியோ செய்தியை வெளியிட்டு இருந்தார். இந்தியா சர்வதேச, உள்நாட்டு வர்த்தகத்தை தடையின்றி மேற்கொள்ள சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களை வங்க தேச நீர்வழிப்பாதைகள் மூலமாக பயன்படுத்தலாம் என அறிவித்தார். நாடுகளுக்கு இடையான அரசியல் எல்லைகள், வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளின் தடைகளாக இருக்கக் கூடாது என ஹசினா தெரிவித்தார்.
வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகம், அகர்தலாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் திரிபுரா ஆளுநர் ரமேஷ் பைஸ், முதல்வர் தெப், அமைச்சர்கள், எம்பிக்களும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments