தேமுதிகவில் அடுத்தடுத்து வேட்பாளர் மாற்றம்- விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை:
பரமக்குடி தனித் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், பரமக்குடி தனித் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று (மார்ச் 17 ) வெளியிட்ட அறிவிப்பில்,
"நடைபெறவிருக்கும் 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் தேமுதிகவின் சார்பில் பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கு.சந்திரபிராகாஷ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்வி நியமிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவருக்கு தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவைத் திரட்டி தேமுதிக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலையில் கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ரவிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு பதில் கஸ்தூரி தங்கராஜ் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பரமக்குடி வேட்பாளரும் மாற்றப்பட்டுள்ளார்.
No comments
Thank you for your comments