திமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அறந்தாங்கி:
அறந்தாங்கி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த முறையும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் இன்று அறந்தாங்கியில் ஊர்வலமாக சென்று கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதி தி.மு.க.விற்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.


No comments
Thank you for your comments