Breaking News

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, மார்ச் 3-

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த நிலையில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தென் நாடு மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், சாதி வாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது, என்றும், மிகவும் பிறபடுத்தப்பட்ட பிரிவில் 20% இட ஒதுக்கீட்டில் 68 சாதிகளை கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5% சதவீதம் தான் கொடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எம்பிசி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு 2.5% இட ஒதுக்கீடு மட்டுமே செய்யப்படுகிறது என்றும், 7 பிரிவுகளை கொண்ட வன்னியர்களுக்கு எப்படி 10.5% ஒதுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு செல்லாது என்றும், தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments