குடிமகன்களுக்கு செக் வைத்த தேர்தல் கமிஷன்
சென்னை, மார்ச் 4:
தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் இனி தினமும் ஒரு நபருக்கு 2 ‘புல்’ மதுபாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும். மது குடித்துவிட்டு கும்மாளம் போடுவதை தடுக்க இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களைகட்ட தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தொண்டர்களும் களம் இறங்கி பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 6-ம் தேதிவரை பிரசாரத்துக்கு செல்லும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.
மது விருந்து, பிரியாணி விருந்து என பிரசாரகளமே கோலாகலமாகும். அரசியல் கட்சிகளும் தொண்டர்களை உற்சாகப்படுத்த மது விருந்துக்கும் ஏற்பாடு செய்வார்கள். இதற்காக அவர்கள் மொத்தமாக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்குவார்கள். இதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இனி தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் இனி தினமும் ஒரு நபருக்கு 2 ‘புல்’ மதுபாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் கிடையாது. மது குடித்துவிட்டு கும்மாளம் போடுவதை தடுக்க இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதைபோல தனி நபர்களுக்கான மதுபான விற்பனை கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளது. புல் மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என்றால் 4 ‘ஆப்’ மதுபாட்டில்களை வாங்கிக் கொள்ளலாம். அதுவும் கிடைக்கவில்லை என்றால் 8 ‘குவாட்டர்’ மதுபாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் இதுதொடர்பான தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments