Breaking News

சட்டமன்றத் தேர்தல்2021- அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல்

சென்னை:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  தி.மு.க. மூத்த தலைவர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பொன்முடி உட்பட  அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, மநீம தலைவர்  மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது.  சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கியது.  

இன்று முகூர்த்த நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆர்வம் காட்டினார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் இன்றே மனுதாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் 2வது நாளான இன்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் ஆட்சியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் ஓரணியாகப் போட்டியிடுகின்றன.



இந்தக் கூட்டணியில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். ஏற்கெனவே 1989, 1991, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏழாவது முறையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி தனலிங்கம் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் மாநில உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பி. தங்கமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் வி.வி. ராஜன் செல்லப்பா.

கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர்.

நெல்லை - நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை - ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ விராட்டிபத்து தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கோவை - தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட பேரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

திமுகவினர் வேட்பு மனு தாக்கல்

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக களமிறங்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலிடம் மு.க.ஸ்டாலின் வேட்பு மனுவை வழங்கினார்.


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வேட்பு மனு தாக்கலின் போது டி.கே.சேகர்பாபு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மட்டும் மு.க.ஸ்டாலினுடன் உடனிருந்தனர். முன்னதாக, மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  அதன்பிறகு திறந்த வேனில் சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதோடு, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும். சட்டமன்ற தேர்தலில் 9-வது முறையாக களம் காணும் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்துள்ளார். 2 முறை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், 2 முறை கொளத்தூர் தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். 

வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  அதன்பிறகு திறந்த வேனில் சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதோடு, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களம் இறக்கப்பட்டுள்ளார். 


அவர், முதல் முறையாக தேர்தல் போட்டி களத்தில் குதித்துள்ளார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி மகுடம் சூட்டிய தொகுதியில், அவரது பேரனான உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி. மோகன்ராஜ்ஜிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தி.மு.க. மூத்த தலைவர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பொன்முடி ஆகியோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மேயருமான, தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாஜகவினர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேவகோட்டை  RO அலுவலகத்தில் எச். ராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமமுகவினர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மதியம் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். மனோகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மநீம சார்பில் வேட்பு மனு தாக்கல்

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனை எதிர்கொள்வதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது.



கமல்ஹாசன் இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர். 


பின்னர் அவர் காரில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மதியம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்தார்

நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல்

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனுவை தாக்கல் செய்தார்..



No comments

Thank you for your comments