செங்கோட்டை முற்றுகை சம்பவம் பாஜகவால் திட்டமிடப்பட்டது!
புதுடெல்லி :
ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்தினர். விவசாயிகளில் ஒரு பிரிவினர் திடீரென டெல்லிக்குள் புகுந்து செங்கோட்டையை முற்றுகையிட்டனர். சிலர் செங்கோட்டையின் உச்சியில் உள்ள கோபுரத்தில் ஏறினர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு விவசாயிகளுக்கு எதிராகவே அம்மாநில மக்கள் திரும்பினர்.
இந்த நிலையில், ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை விவகாரம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த செங்கோட்டை சம்பவம் அவர்களால் (பா.ஜனதா) திட்டமிடப்பட்டது. டெல்லியில் உள்ள தெருக்கள் எங்களுக்கு தெரியாது என்பதால் எங்களை தவறாக வழிநடத்தினார்கள் என மக்கள் என்னிடம் கூறினர். கையில் கொடியை ஏந்தியவர்கள் பா.ஜனதா தொண்டர்கள். நம்முடைய விவசாயிகள் எதையும் செய்வார்கள். ஆனால், நாட்டிற்கு எதிராக செயல்படமாட்டார்கள்’’ என்றார்.

No comments
Thank you for your comments