Breaking News

இளம் ஓட்டுக்களை அள்ளுமா இணைய பிரசார யுக்திகள்!

சென்னை, பிப்.26-

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அனைத்து கட்சிகளிலும், தகவல் தொழில்நுட்ப அணி முக்கியத்துவம் பெற தொடடங்கியுள்ளது. இதனால் இளம் ஓட்டுக்களை அள்ளுமா இணைய பிரசார யுக்திகள்.



'வணக்கமுங்க' என கால்கடுக்க நடந்து சென்று பூத் வாரியாக ஓட்டு கேட்ட காலம் எல்லாம் போயே போச்சு. தற்போது இன்டர்நெட் புரட்சியால் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் தவழ தொடங்கி விட்டது. அனைவரும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூடியூப் என அனைத்து சமுக வலைதளங்களிலும் உலவுகின்றனர். தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால் இவற்றில் நேரம் செலவிடும் போது அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட பெரிய கட்சிகளின் பிரசார துணுக்குகள் பாடல்கள் தான் ஒலிக்கின்றன. 'வெற்றி நடை போடும் தமிழகமே' என முதல்வர் பழனிசாமியின் வீடியோக்களும், 'ஸ்டாலின் தான் வர்றாரு; மாற்றம் தர போறாரு' என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வீடியோக்களும் தத்ருபமாக சினிமா படங்கள் போல வியக்க வைக்கின்றன.

இயல்பாக தொடங்கும் கதையமைப்பு, வசனங்கள் போன்றவற்றால் ஏதோ சினிமா விளம்பரம் போல் என பார்த்து கொண்டிருந்தால் 'போடுங்கம்மா ஓட்டு' என முடிகிறது.'பெரியவர்களிடம் ஈர்ப்பை பெற்ற இந்த காணொளிகள் 18ஐ தாண்டிய இளசுகள் மத்தியில் பல்வேறு விமர்சனஙகளை ஏற்படுத்தி உள்ளது. ஐ.டி., ஜாம்பவான்களிடம் முற்றிலும் தங்கள் கட்சி பிரசார முறையை அடகு வைத்த இரு கட்சிகளும் நேரடி களத்திலும் வீரியமிக்க பிரசாரத்தில் ஈடுபட்டாலும் இணைய பிரசாரத்தின் மீதும் முழுநம்பிக்கை வைத்துள்ளன. இதனால் ஆளுங்கட்சி தங்கள் சாதனைகளையும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சியின் குறைகளை கூறி மாற்றம் தர போவதாகவும் வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.அரசியல் புரிதல் இல்லாத, நோட்டாவுக்கு ஹாய் சொல்ல கூடிய இளசுகளுக்கு இந்த இணைய பிரசாரங்கள் போரடிக்கின்றதாம். சில நேரங்களில் எரிச்சலடையவும் செய்கிறதாம். நடுநிலை இளசுகளும் இதையே தான் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட கட்சியை கிண்டலடிக்கும் 'யூடியூப் வீடியோ' பார்க்கும் போது அதே கட்சியின் பிரசார துணுக்குகள் வந்து செல்வது கூடுதல் நோவு என்கின்றனர். இணைய பிரசார யுக்திகள் அ.தி.மு.க., தி.மு.க., கட்சியின் தொண்டனுக்கு பெருமை தந்தாலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமுகவலைத்தளங்களிலும் கட்சிகளின் ஆதிக்கம் தொடர்வதயணால் முற்றிலும் இளம் ஒட்டுக்களை கவர விரிக்கப்பட்ட இந்த வலை, அவர்களை எரிச்சலடைய செய்துள்ளது தான் நிதர்சனமான உண்மை.

No comments

Thank you for your comments