அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கலிபோர்னியாவில் அமோக வெற்றி!
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் குடியரசுக்
கட்சி வேட்பாளராகப் போட்டியிடவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், உட்கட்சித்
தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தில் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில்
போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் கட்சிக்குள் இருக்கும்
டெலிகேட்ஸ்களிடம் அதிக வாக்குகள் பெறுவது முக்கியம்.
அமெரிக்காவின் பிரதான கட்சிகள் இரண்டுதான். ஒன்று ஜனநாயகக் கட்சி. அடுத்தது குடியரசுக் கட்சி.
ஜனநாயகக் கட்சியில் ஹிலரி க்ளின்டன் அதிக வாக்குகள் பெற்று அக்கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்னொரு கட்சியான குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்ப்
போட்டியிடுகிறார். அதற்கான உட்கட்சித் தேர்தல் ஏற்கெனவே அவர் 1237
டெலிகேட்ஸ் வாக்குகளைப் பெற்றுவிட்டார். மீதியிருந்த கலிபோர்னியா,
நியூஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, தெற்கு டகோட்டா மாகாணங்களில் உள்ள
டெலிகேட்ஸ்களின் வாக்குகளையும் அவர் செவ்வாய்க்கிழமை பெற்றார்.
இந்த நான்கு மாகாணங்களில் பெரியது கலிபோர்னியாதான். இங்குள்ள 172
டெலிகேட்ஸ் வாக்குகளை பெற்றதன் மூலம், ஹிலரியை எதிர்த்துப் போட்டியிடும்
அதிகாரப்பூர்வ குடியரசுக் கட்சி வேட்பாளராகியுள்ளார் ட்ரம்ப்.
கலிபோர்னியா முடிவுகள் வெளியாவதற்கு முன், தன் ஆதரவாளர்கள் மத்தியில்
பேசிய ட்ரம்ப், "நான் நிச்சயம் உங்களை ஏமாற்ற மாட்டேன். மூழ்கிக்
கொண்டிருக்கும் இந்த நாட்டின் அமைப்பை முற்றிலும் மாற்றி அமைப்பேன்.
க்ளின்டன்கள் இந்தப் பதவியை தங்கள் சொந்த லாபத்துக்காக
பயன்படுத்தினர். பில் க்ளிண்டன், ஹிலரி க்ளின்டன் ஆகியோரின் இதுவரை
வெளிவராத பல ரகசியங்களை அடுத்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் அம்பலமாக்கப்
போகிறேன்," என்றார்.
No comments
Thank you for your comments