கூத்தாண்டவர் கோவில் திருவிழா: மிஸ் கூவாகம் பட்டம் வென்றார் சேலம் காயத்ரி
விழுப்புரம், ஏப்.19-
சிறப்பு விருந்தினர்களாக. நடிகை அனுராதா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர்,
பின்னணி பாடகர் வேல்முருகன், பின்னணி பாடகி சின்னபொண்ணு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர். நடிகை ஷகிலா உள்ளிட்ட மூவர் நடுவர்களாக இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள
கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கி
நடைபெற்று வருகிறது. இன்று மாலை திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி
நடக்கிறது. திருநங்கைகள் பூசாரி மூலம் தாலி கட்டிக்கொண்டு இரவு முழுவதும்
கும்மியடிப்பார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல்வேறு
பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும்,
வெளிநாடுகளிலிருந்தும் கூவாகத்துக்கு திருநங்கைகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மிஸ் கூவாகம் போட்டி
திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு மிஸ் கூவாகம் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தமிழ் மாநில 36 மாவட்டங்களின் திருநங்கை ஜமாத் தலைவிகள்
நடத்தினர். வேலூர் திருநங்கை அரளியின் சிறப்பு நடனம் நடைபெற்றது.
சேலம் காயத்ரி
நடன நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, திருநங்கைகளின் அழகிப் போட்டி நடைபெற்றது.
இதில், 57 திருநங்கைகள் கலந்துகொண்டு, நடனம், நடை, உடை, பாவனையுடன் திறனை
வெளிப்படுத்தினர். இதில், 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மூன்று
சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் , சேலத்தைச் சேர்ந்த காயத்ரி மிஸ்
கூவாகம் பட்டம் வென்றார்.
அழகிகளுக்கு கிரீடம்
தொடர்ந்து மலேசியாவைச் சேர்ந்த பவானி இரண்டாமிடத்தையும், சென்னையைச்
சேர்ந்த குஷி மூன்றாமிடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு, கிரீடம் சூட்டி
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நடிகை அனுராதா, ஷகிலா
சிறப்பு விருந்தினர்களாக. நடிகை அனுராதா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், பின்னணி
பாடகர் வேல்முருகன், பின்னணி பாடகி சின்னபொண்ணு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர். நடிகை ஷகிலா உள்ளிட்ட மூவர் நடுவர்களாக இருந்தனர்.
திருமணத்திற்கு அனுமதி
பட்டம் வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி, மிஸ் கூவாகமாக
தேர்வுசெய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. திருநங்கைகளை பெற்றோரும்
புறக்கணித்துவிடுவதால், சமுதாயத்தில் ஆண் துணையுடன் இருக்க வேண்டியது
அவசியமாகிறது. திருநங்கைகள் தாங்கள் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்ள
அரசு சட்டப் பூர்வ அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
பெற்றோர்கள் கவனிப்பு
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்துள்ளதைப் போல, ஓர் ஆண்
துணையுடன் வாழ்க்கை நடத்த அரசு அனுமதி தர வேண்டும். திருநங்கைகள்
பெற்றோர்களை கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஈவ்டீசிங் சட்டம்
விழாவில் திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வாழ்த்திப் பேசினார் அப்போது
அவர், திருநங்கைகள் தெய்வப்பிறவிகள். பெற்றோர்கள் இவர்களை
தெய்வக்குழந்தையாக பார்க்க வேண்டும். திருநங்கைகளை கேலி கிண்டல்
செய்பவர்களை "ஈவ் டீசிங்' சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
களை கட்டும் திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி இன்று
இரவு நடைபெறுகிறது. பின்னர் புதன்கிழமையன்று கூத்தாண்டவர் கோயில்
தேரோட்டமும், திருநங்கைகள் தாலி அகற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
குவிந்துள்ள திருநங்கைகள்
கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான திருநங்கைகள்
கூவாகத்தில் குவிந்துள்ளனர். இதேபோல் இந்த விழாவை காண்பதற்கு உள்ளூர்
மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பார்வையாளர்கள்
வந்துள்ளனர்.
No comments
Thank you for your comments