Breaking News

”சென்னை புத்தக சங்கமம்” புத்தகக் கண்காட்சி - ஏப்ரல் 22 முதல் துவக்கம்

Book fair held in Chennaiசென்னை, ஏப்.20-
சென்னையில் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 22 ஆம் தேதி துவங்கி 24 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதுகுறித்த அறிவிப்பில், "சென்னை புத்தகச் சங்கமம்" 2016 ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிய 3 நாட்கள் சென்னை - பெரியார் திடலில் நடைபெறுகிறது.

22ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அடுத்த இரு நாட்களும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

சென்னை வெள்ளத்தில் பாதிப்பு
கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மாநகர் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதையொட்டி, பாதிப்புக்குள்ளான பதிப்பாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உதவிடும் வகையில் இந்த ஆண்டு முற்றிலும் புதுமையான முறையில் முதல் முறையாக அனைத்து நூல்களும் 50ரூ கழிவில் விற்பனை செய்யப்படுகின்றன.

கழிவு விலையில் கிடைக்கும்
இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் ஒரே இடத்தில் 50% கழிவு விலையில் கிடைக்கும்.

புத்தகர் விருது
இந்த மாபெரும் புத்தகக் காட்சியை ஏப்ரல் 22 அன்று காலை 10 மணியளவில் வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் தலைமையில் தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் செர்ஜி கோட்டவ் துவக்கி வைக்க உள்ளார். புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களைப் பாராட்டி, 2016 ஆம் ஆண்டிற்கான "புத்தகர் விருது" வழங்கும் விழா 24.4.2016 அன்று மாலை நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கான போட்டிகள்
மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறுவர்களுக்காக ஓவியம், கலைப் பொருட்கள் உருவாக்குதல், கதை சொல்லுதல் மற்றும் அடிப்படை அறிவியல் கற்றுக் கொள்ளல் முதலிய பிரிவுகளில் குழந்தைகளுக்கான பயிற்சிகளும், போட்டிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்று வெற்றி பெறும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகளும் உண்டு. இதில் 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர் சிறுமியர் பங்கேற்கலாம்.

உணவுத் திருவிழாவும் உண்டு
கோடை விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புத்தகக் காட்சிக்கு வரும் அனைவருக்கும் இந்த ஆண்டு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments