Breaking News

தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை அறிவிக்க கட்டுப்பாடு: தேர்தல் ஆணையம்

தமிழகம், மார்ச் 11-
அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்களை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து, தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அம்சங்களைப் பற்றிய வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.

தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் வாக்குறுதிகளை "ஊழல் நடவடிக்கை" என்று, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கருதமுடியாது.

ஆனால் உண்மையில், விலையில்லாப் பொருட்களை வழங்குவதாகக் கூறுவது, அனைத்து மக்களிடமும் சந்தேகமின்றி தாக்கத்தை ஏற்படுத்தும். இது சுதந்திரமான, நேர்மையான தேர்தலை மிகவும் பாதிக்கும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே தேர்தல் அறிக்கையை கட்சிகள் வெளியிடுகின்றன.

அறிவிப்புக்கு முன்பு வெளியிடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் அந்த அறிக்கையின் நோக்கம், தேர்தல் நடைமுறைக்கு நேரடித் தொடர்புடையதாக இருப்பதால் அதை தேர்தல் ஆணைய ஒழுங்குபடுத்த முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதியில் சலுகைகளையும், வாக்குறுதிகளை வழங்குவது தங்களது உரிமை மற்றும் கடமை என்று பல கட்சிகள் தெரிவித்தன. அதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது.

ஆனாலும், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதிலும், அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே நடுநிலைத்தன்மையை நிலை பெறச் செய்வதிலும் இப்படிப்பட்ட வாக் குறுதிகள், சலுகைகள் குறித்த அறிவிப்பால் ஏற்படும் தேவையற்ற பாதிப்புகளை தேர்தல் ஆணையம் தனது கருத்தில் எடுக்காமல் இருக்க முடியாது.

எனவே, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது சில வழிமுறையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதன்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக எதுவும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடாது. நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் இடம் பெறுவதில் தவறு இல்லை.

ஆனால் தேர்தல் நடவடிக்கையின் தூய்மையைக் கெடுக்கும் வகையிலோ, வாக்காளர்களைக் கெடுக்கும் வகையிலோ வாக்குறுதிகள் அளிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

வழங்கப்படும் வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், அதை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் விரிவாக விளக்கப்பட்டு, ஒளிவுமறைவற்ற தன்மை, நடுநிலைத்தன்மை, வாக்குறுதியின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும், அந்த வகையில் நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments