இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடம்
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்கீழ், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதால், இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடம் வகிப்பதாக அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள், வாழ்வியல் வசதிகள் கொண்ட நகரம் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அவற்றின் தரவரிசையை அமெரிக்காவின் "மெர்சர்" என்ற ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குற்றங்கள் குறைவு, காற்று மாசுகளின் அளவு குறைந்திருப்பது போன்ற பல்வேறு அம்சங்களின் காரணமாக, இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பு மிக்க நகரமாக சென்னை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு மேற்கொண்டுவரும் சிறப்பான பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளால், இந்தச் சாதனை படைக்க முடிந்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை சிறப்பாக பராமரிக்கப்படுவதாலும், வேறு எந்த மாநிலத் தலைநகரத்திலும், இல்லாத அளவுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாலும், பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 450 நாடுகள் குறித்த தகவல்களை ஆய்வு செய்த மெர்சர் நிறுவனம், குறைவான குற்ற விகிதம், காற்றுமாசு குறைவு, ஆங்கிலத்தை சிறந்த முறையில் பயிற்றுவிக்கக்கூடிய சர்வதேச பள்ளிகள் போன்ற காரணங்களால், சென்னை, ஐதராபாத், புனே ஆகிய நகரங்கள் சிறப்பிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments