Breaking News

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக புகார்- ராஜஸ்தான் பல்கலை.யில் 4 காஷ்மீர் மாணவர்கள் கைது

ஜெய்ப்பூர், மார்ச் 16-
Beef row: 4 Kashmiri students arrestedராஜஸ்தானின் மேவார் பல்கலைக் கழக விடுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக 4 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் மேவார் பல்கலைக் கழகத்தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் சிலர் விடுதி அறையில் இறைச்சி உணவை சாப்பிட்டுள்ளனர்.

உடனே சில மாணவர்கள் வெளியே உள்ள இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பசுமாட்டு இறைச்சி சாப்பிடுவதாக கூறினர். இதனைத் தொடர்ந்து விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர், பசுமாட்டிறைச்சி சாப்பிட்ட மாணவர்களை கைது செய்ய கோரி மறியல் போராட்டம் நடத்தினர்.

அத்துடன் பசுமாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக கூறி இறைச்சி கடை ஒன்றையும் தீ வைத்தனர். இதனால் மேவார் பல்கலைக் கழக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இறைச்சி சாப்பிட்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டிறைச்சியைதான் அவர்கள் சாப்பிட்டதும் தெரியவந்தது.

இதனை போராட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பினரிடம் கூறிய போதும் அவர்கள் இதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே மேவார் பல்கலைக் கழக துணைவேந்தர் அசோக் காடியா, பல்கலைக் கழக விடுதியில் எந்த ஒரு இறைச்சி உணவுக்கும் அனுமதி கிடையாது. மாணவர்கள் இதை மீறி இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இதேபோல் பசுமாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி அக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் இந்துத்துவா அமைப்பினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments